ரீ.எல். ஜவ்பர்கான்
மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்தின் மீது வௌ்ளிக்கிழமை (10) நண்பகல் தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்ட நபர் ஒருவர், இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
35 வயது மதிக்கத்தக்க குறித்த நபர், கூரிய பிளேட்டினால் தனது கழுத்தை அறுத்துக்கொள்வதை அவதானித்த கல்லடிப் பாலத்தில் கடமையிலிருந்த பொலிஸார், உடனடியாகச் செயற்பட்டு அவரைத் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இருப்பினும், கழுத்தில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்த நிலையில், அவர் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவத்தினால் கல்லடிப் பாலத்தில் சில மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸாரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த நபர் எதற்காக இவ்வாறான முடிவை எடுத்தார் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments