தங்கொட்டுவ பிரதேசத்திலுள்ள ஒரு பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறின் காரணமாக, ஒரு மாணவன் சக மாணவனால் கடதாசி வெட்டும் கத்தியால் (Paper Cutter) தாக்கப்பட்டு படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவம் திங்கட்கிழமை (06) மதிய வேளையில் பாடசாலை வளாகத்தினுள்ளேயே இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்குள்ளான மாணவன் தங்கொட்டுவ மாவத்தகம பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய கே. கவிந்து நிம்சார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காயமடைந்த அவர் மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த மாணவனும் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் மாணவனும் அதே பாடசாலையில் தரம் 11 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் ஒரே வகுப்பு மாணவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இருவருக்குமிடையில் முன்பும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற தினமான திங்கட்கிழமை (06) இவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தீவிரமடைந்த நிலையில், ஒரு மாணவன் மற்றைய மாணவனின் கையை கடதாசி வெட்டும் கத்தியால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும், சம்பவம் குறித்து தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments