தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில், கார் ஒன்றினுள் 33 வயதுடைய வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஜூன் 17 ஆம் திகதி காருக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், தெல்தெனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
குறித்த சம்பவம் நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றதாகக் கருதப்பட்டதால், மேலதிக விசாரணைகள் நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் அந்த பெண்ணின் காதலன் என அறியப்படும் சந்தேக நபர் ஒருவர், ஜூன் 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 43 வயதானவர், சந்தேகநபரான அந்த பெண் 35 வயதானவர் என்றும் அவர் பல்லேகல பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
மேலதிக விசாரணைகளின் போது, இச்சந்தேக நபர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறிப்பாக கம்பஹா,புதுக்கடை, திஸ்ஸமாராம, கடுவெல மற்றும் ஹொரணை ஆகிய பகுதிகளில் உள்ள நீதவான் நீதிமன்றங்களில் பல நிதி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு:
• திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, 11,873,000 ரூபாவையும், கார் ஒன்றையும் சட்டவிரோதமாகப் பெற்றுக் கொண்டமை தொடர்பான வழக்கு கம்பஹா நீதவான் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது.
• திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, 1,721,000 ரூபாவை மோசடி செய்தமை தொடர்பாக புதுக்கடை 05 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணையில் உள்ளது.
• திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, 1,376,000 ரூபாவை மோசடி செய்தமை தொடர்பாக புதுக்கடை 05 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணையில் உள்ளது.
• வெளிநாட்டிலிருந்து வாகனம் இறக்குமதி செய்வதாகக் கூறி, 2,200,000 ரூபாவை மோசடி செய்தமை தொடர்பாக திஸ்ஸமாராம நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணையில் உள்ளது.
• குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) குறித்த சந்தேக நபருக்கு எதிராக அத்தனகல்ல, ஹோமாகம மற்றும் கடுவெல நீதவான் நீதிமன்றங்களில் 04 வழக்குகள் தொடரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
• வெளிநாடு செல்வதற்கு உதவுவதாகக் கூறி, 4,200,000 ரூபாவை மோசடி செய்தமை தொடர்பாக அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணையில் உள்ளது.
இப்பெண்ணின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், மேலதிக விசாரணைக்காக நுவரெலியா பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

0 Comments