Ticker

6/recent/ticker-posts

தெல்தெனிய பெண் கொலை வழக்கு: தப்பியோடிய 'காதலனும்' மனைவியும் யாழ்ப்பாணத்தில் கைது



தெல்தெனிய பெண் கொலை வழக்கு: தப்பியோடிய 'காதலனும்' மனைவியும் யாழ்ப்பாணத்தில் கைது!

தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான உயிரிழந்த பெண்ணின் காதலனும், அவரது மனைவியும் தங்களது குழந்தையுடன் யாழ்ப்பாணத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம், சாவகச்சேரி நோக்கி நேற்று (23) பேருந்து ஒன்றில் தம்பதியினர் பயணிப்பதாகக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும், வலான ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து இன்று (24) அதிகாலை நடத்திய கூட்டுத் தேடுதல் வேட்டையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.



முஸ்லிம் பெண் வேடம்: கைது செய்யப்படும் போது பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காகப் பிரதான சந்தேகநபர் முகக்கவசம் அணிந்திருந்ததுடன், அவரது மனைவி முஸ்லிம் பெண் போன்று வேடமணிந்திருந்ததாகப் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த சில நாட்களாக நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் தலைமறைவாக இருந்ததோடு, கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயன்றுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சரணடையவிருந்ததாக வாக்குமூலம்: கைதான சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, தாம் வவுனியாவிலிருந்து குருநாகலுக்குச் சென்று, அங்குள்ள தங்களது மற்ற இரு பிள்ளைகளையும் பார்த்துவிட்டு பொலிஸாரிடம் சரணடையத் திட்டமிட்டிருந்ததாகக் கூறியுள்ளார்.

வலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படையின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் முழுமையான மேற்பார்வையின் கீழ் இந்த வெற்றிகரமான கைது நடவடிக்கை அரங்கேற்றப்பட்டுள்ளது. கைதான சந்தேகநபர்கள் இருவரையும் மேலதிக விபரங்கள் மற்றும் தீவிர விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments