நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக, இன்று (11) நள்ளிரவு முதல் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பால் தேநீர் ரூ. 10 இனாலும், சாதாரண தேநீர் ரூ. 5 இனாலும் , ரைஸ் மற்றும் கொத்து ரூ. 25 இனாலும் ,சிற்றுண்டி வகைகள் ரூ. 10 இனாலும் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டமையே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போதைய நிலையில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளில் மாற்றமில்லை என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (10) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலைகள் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டுள்ளன:12.5 கிலோ சிலிண்டர்: ரூ. 3,990 (ரூ. 300 அதிகரிப்பு)
5 கிலோ சிலிண்டர்: ரூ. 1,602 (ரூ. 120 அதிகரிப்பு)
2.3 கிலோ சிலிண்டர்: ரூ. 750 (ரூ. 56 அதிகரிப்பு)
கடந்த 09 ஆம் திகதி நள்ளிரவு முதல் அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன:பெற்றோல் 92: ரூ. 317 (ரூ. 24 அதிகரிப்பு)
பெற்றோல் 95: ரூ. 365 (25 அதிகரிப்பு)
ஒட்டோ டீசல்: ரூ. 303 (22 அதிகரிப்பு)
சுப்பர் டீசல்: ரூ. 353 (24 அதிகரிப்பு)
மண்ணெண்ணெய்: ரூ. 195 (13 அதிகரிப்பு)

0 Comments