பாறுக் ஷிஹான்-
மீன் விற்பனை போர்வையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை வீதியில் இன்று மாலை இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஊழல் ஒழிப்புப்பிரிவு உப பொலிஸ் பரிசோதகர்களான கே.எல்.எம் முஸ்தபா மற்றும் பி.குமாரசிங்க தலைமையிலான பொலிஸார் இக்கைது நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது 49, 23 வயதுடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் வசமிருந்து 40 மற்றும் 50 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதில் கைதான சந்தேக நபர்களில் ஒருவர் ஏற்கனவே போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாரால் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்ட போது மற்றுமொரு சந்தேக நபர் தொடர்பில் தகவல் வழங்கியுள்ளார்.
இதற்கமைய சமகாலத்தில் மற்றொரு சந்தேக நபரான மீன் வியாபாரி கைதானார். கைதான இவ்விருவரும் வியாபாரி உதவியாளர் என மீன் விற்பனையுடன் செயற்பட்டு வருபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இச்சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப்பொறுப்பான பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சுஜித் வேதமுல்லவின் பணிப்புரைகமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி நெறிப்படுத்தலில் கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் வழிகாட்டுதலின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.
மேலும் இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments