பெண்களின் படங்களை தவறாக பயன்படுத்திய சந்தேக நபரை சம்மாந்துறை நீதிமன்றம் விளக்கமறியல் வைக்க உத்தரவு ! – பெண்களின் விடயத்தில் அக்கறையாக இருக்க கோருகிறது சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் !
நூருல் ஹுதா உமர்
பெண்பிள்ளையின் வாட்சப் சமூக வலைத்தள பதிவுகள் (ஸ்டேட்டஸ்) பதிவிறக்கம் செய்து செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்வாண புகைப்படங்களாக மாற்றப்பட்டு தவறான நோக்கங்களுக்காக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிற சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணை இன்று (30) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் நடைபெற்றுவரும் நிலையில் இன்று இன்னுமொரு சந்தேக நபர் கௌரவ நீதவான் நூர்தீன் சர்ஜுன் முன்னிலையில் முன்னிறுத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றது.
இந்நிலையில் இன்றிலிருந்து இரு வாரங்களுக்கு விளக்கமறியலுக்கு அவர் உட்படுத்தப்பட்டுள்ளார்.
இன்னும் சில சந்தேக நபர்களை கைதுசெய்ய பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நீதிமன்றுக்கு தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஏ.எம்.நஸீல், எம்.வை. அன்வர் ஸியாத், ஷாமிலா மன்சூர், முஹம்மட் பிர்னாஸ் போன்ற சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.
இது விடயம் தொடர்பில் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிக்கையில், இவ்வாறானவர்கள் பற்றி இளைஞர் யுவதிகள் விழிப்புடன் இருக்குமாறும், சமூக வலைத்தளங்களில் பெண்கள், சிறுமிகளின் புகைப்படங்களை பதிவேற்றுவதை தவிர்ந்து கொள்ளுமாறும் சமூக வலைத்தள பதிவுகளை தவறாக மாற்றி பயன்படுத்துவது சட்டவிரோதமாகும், தனிப்பட்ட மக்களின் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற நிகழ்வுகளை சந்திக்கும்போது உடனடியாக பொலிஸைத் தொடர்புகொள்ளுமாறும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

0 Comments