மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கு மத்தியில், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் உயர்வடைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளை இலக்காகக் கொண்ட பிரதான எண்ணெய் குறியீடுகளின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக புதிய அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
இன்று பதிவாகிய தரவுகளின்படி பிரதான எண்ணெய் வகைகளின் விலை மாற்றங்கள் வருமாறு:
• WTI Crude (அமெரிக்க எண்ணெய்): ஒரு பீப்பாயின் விலை 117.67 அமெரிக்க டொலர்கள் வரை உயர்வடைந்துள்ளதுடன், இது நேற்றுடன் ஒப்பிடுகையில் 27.73% பாரிய வளர்ச்சியாகும்.
• Brent Crude (ப்ரெண்ட் எண்ணெய்): உலக எண்ணெய் விலையைத் தீர்மானிக்கும் பிரதான குறியீடான ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 25.34% இனால் அதிகரித்து 116.18 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
• Murban Crude: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உற்பத்தியாகும் மர்பன் எண்ணெய் விலையும் 16.96% இனால் அதிகரித்து 120.75 டொலர்கள் வரை உயர்வடைந்துள்ளது.
• WTI Midland: அதிகப்படியான விலை உயர்வை இது காண்பித்துள்ளதுடன், 120.69 டொலர்கள் வரை விலை உயர்ந்துள்ளது. இது 30.17% சதவீத அதிகரிப்பாகும்.
எண்ணெய் விலைக்கு மேலதிகமாக, இயற்கை எரிவாயு (Natural Gas) விலை 9.57% இனாலும், பெட்ரோல் (Gasoline) விலை 15.71% இனாலும் உயர்வடைந்துள்ளன.
ஏப்ரல் மாதத்திற்கான எண்ணெய் ஒப்பந்தங்களின் கீழ் WTI Crude விலை 120.00 டொலர் எல்லை வரை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த நிலைமை உலகப் பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மத்திய கிழக்கு நெருக்கடி மேலும் தீவிரமடைந்தால், வரும் வாரங்களில் எரிபொருள் விலைகள் மேலும் உயரும் அபாயம் உள்ளது.
தற்போதைய விலை உயர்வைக் கருத்தில் கொள்ளும்போது, உலகெங்கிலும் உள்ள நாடுகளில் எரிபொருள் விலையானது கடந்த மாதம் நிலவிய விலையை விட இருமடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

0 Comments