முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவில் இருந்து நீக்கப்பட்ட 116 பாதுகாப்புப் பணியாளர்களும், தமது வெளியேற்றத்துக்கு முன்னர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரின் மனைவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
இது குறித்த பதிவொன்றை மகிந்த ராஜபக்ச தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அரசாங்கம் மேற்கொண்ட மறுஆய்வுக்குப் பிறகு, மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த 116 பேர் நீக்கப்பட்டனர்.
மனிதவளத் துறைக்குப் பொறுப்பான துணை காவல்துறை அதிபர், ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவுக்கு இந்த முடிவைத் தெரிவித்தார்.
இதனையடுத்தே தங்கள் கடமைகளை முடித்து வெளியேறுவதற்கு முன்னர், பாதுகாப்புப் பணியாளர்கள் முன்னாள் ஜனாதிபதியுடன் ஒரு சுமுகமான உரையாடலை நடத்தினர்.
அத்தோடு, அவருடன் ஒரு குழு புகைப்படத்தையும் எடுத்துக் கொடுத்தனர். இந்தநிலையில், தமது எக்ஸ் பக்கத்தில் மகிந்த ராஜபக்ச தெரிவிக்கையில், “பல ஆண்டுகளாக, நீங்கள் ஒரு நிழலைப் போல என்னுடன் நின்று, என் உயிரையும் என் குடும்ப உறுப்பினர்களின் உயிரையும் பாதுகாத்தீர்கள்.
உங்கள் தியாகங்கள், விசுவாசம் மற்றும் சேவை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.
உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் ஆழ்ந்த மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.


0 Comments