Ticker

6/recent/ticker-posts

காணாமல் போன இளம்பெண் - காதலனின் வாக்குமூலத்தால் கிணற்றுக்கு பாதுகாப்பு -


எஸ். கீதபொன்கலன்

காணாமல்போன யுவதியின் காதலன் என சந்தேகிக்கப்படும் இளைஞன் வழங்கிய வாக்குமூலத்தை அடுத்து, பாலடைந்த கிணற்றுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த கிணற்றை வௌ்ளிக்கிழமை (05) தோண்டுவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலை,சேருவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தங்கநகர் பகுதியைச் சேர்ந்த இளம் யுவதியான நடேஸ்குமார் வினோதினி (வயது 25 ) என்பவர் காணாமல் போயுள்ளதாக, அவரது குடும்பத்தினரால், சேருவில மற்றும் மூதூர் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்துவரும் மூதூர் பொலிஸார் சந்தேகத்தின்பேரில் கிளிவெட்டியைச் சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கிளிவெட்டி கிராமத்தின் எல்லைப் புறத்தில் உள்ள பாழடைந்த கிணற்றை தோண்டுவதற்கு நீதிமன்ற அனுமதியை பொலிஸார் பெற்றுள்ளனர். 

இந்நிலையில் குறித்த கிணற்றடியில் புதன்கிழமை(03) முதல் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இக்கிணறானது மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (05) தோண்டப்படவுள்ளதாக மூதூர் பொலிஸார் கூறினர்.

சேருவில பிரதேச செயலாளர் பிரிவுக்கட்பட்ட தங்கநகர் கிராமத்தைச் சேர்ந்த நடேஸ்குமார் வினோதினி (வயது 25) என்ற குறித்த யுவதியும், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அயல் கிராமமான கிளிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் விஷ்னுகாந்த் (வயது 25) என்ற இளைஞனும் காதலித்து வந்ததாகவும் தெரிய வருகின்றது.

குறித்த யுவதி, காதலனுடன் மட்டக்களப்புக்கு கடந்த மே மாதம் சென்று வசித்து வந்ததுள்ளார். மே மாதம் 31ஆம் திகதி மாலை அழுத நிலையில் குரல் பதிவொன்றை குடும்பத்தாருக்கு அனுப்பி உள்ளார். அன்றையதினம் இரவு வீடியோ அழைப்பில் குடும்பத்தாருடன் கதைத்துள்ளார்.விரைவில் வீட்டுக்கு வருவதாக கூறியுள்ளார்.அதன் பின்னர் அவருடன் தொடர்பு இல்லாமல் போயுள்ளது என குடும்பத்தினர் கூறினர்.

இந்நிலையில், குறித்த காதலனின் இலக்கத்திற்கு யுவதியின் குடும்பத்தார் பல முறை தொடர்பை ஏற்படுத்த முயற்சித்தனர்.எனினும் அவ்விளைஞன் ஜூன் மாதம் 13ஆம் திகதி அழைப்பை எடுத்து தான் வேலையில் நிற்பதாகவும், வீட்டுக்குச் சென்று அக்காவுடன் கதைக்க கொடுப்பதாகவும்,காணமல் போயுள்ள யுவதியின் தம்பியிடம் கூறியதாகவும் குடும்பத்தவர்கள் கூறினர்.

இதன் பின்னர் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில் சேருவில மற்றும் மூதூர் பொலிஸ் நிலையங்களில் தாம் ஜூலை மாதம் 1ஆம் திகதி முறைப்பாடு செய்ததாகவும் யுவதியின் குடும்பத்தார் கூறினர்.

காணாமல் போயுள்ள யுவதி,கொலை செய்து போடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் குறித்த கிணறானது, ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் அருகில் இருந்த குப்பைகளைக் கொண்டு மூடப்பட்டுள்ளதாகவும் சந்தேகம் தெரிவித்துள்ள மூதூர் பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்

Post a Comment

0 Comments