Ticker

6/recent/ticker-posts

ரஃபா நகரத்தை குறிபாத்த இஸ்ரேல் – அதிகரிக்கும் மரணங்கள்



காஸாவின் மிக முக்கிய நகரான ரஃபா நகரத்தை இஸ்ரேல் தாக்கத் தொடங்கியுள்ளதால் திடீரென பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த சில காலமாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக காஸாவில் உள்ள ஹமாஸ் படையைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் போர் பல மாதங்களாகத் தொடர்கிறது.

சில காலமாக அங்கு கொஞ்சம் அமைதி நிலவி வந்த நிலையில், மீண்டும் இப்போது மோசமான தாக்குதல் சம்பவம் அரங்கேறி உள்ளது. அதாவது எகிப்து- இஸ்ரேல்- காஸா எல்லையில் அமைந்துள்ள ஹமாஸ் கெரெம் ஷாலோம் எல்லைப் பகுதியில் சமீபத்தில் ராக்கெட் தாக்குதல் நடைபெற்றது. ரஃபா நகரில் இருந்து சுமார் 10 ஏவுகணைகள் கெரெம் ஷாலோம் எல்லையை நோக்கி ஏவப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கிறது.

இந்தத் தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த பல வீரர்கள் காயமடைந்துள்ளனர். குறைந்தது 10 பேர் மருத்துவமனையில் தீவிரமாகச் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து எல்லை கிராஸிங் மூடப்பட்டுள்ளது. நிலைமை சீராகும் வரை அந்த கிராஸிங் மூடப்பட்டே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றுள்ளது.

இதற்கிடையே இந்தத் தாக்குதல் நடந்து கொஞ்ச நேரத்திலேயே தெற்கு காஸாவில் உள்ள ரஃபா நகரத்தை இஸ்ரேல் தாக்கியது. இதில் 3 வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஹமாஸ் தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இரு தரப்பிற்கும் இடையே நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. தீவிர ஆலோசனை நடந்த போதிலும் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காஸா தாக்குதலில் இஸ்ரேலுக்குச் சர்வதேச அளவில் எதிர்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவிலேயே இஸ்ரேல் தாக்குதலைக் கண்டித்து

போராட்டங்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் பைடன் கூட ரஃபா நகரில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தக்கூடாது எனக் கூறியிருந்தார். மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் ரஃபா நகரில் தாக்குதல் நடத்தினால் நிலைமை மோசமாக மாறும் என்பதாலேயே அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தது. இருப்பினும், அமெரிக்காவின் எச்சரிக்கையைத் தாண்டி இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

காஸா போர் மீதான சர்வதேச விமர்சனங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இது தொடர்பாக அவர் கூறுகையில், “எந்த ஒரு சர்வதேச மன்றமும் எந்தளவுக்கு அழுத்தம் கொடுத்தாலும் அது இஸ்ரேல் தன்னை தானே தற்காத்துக் கொள்வதைத் தடுக்காது. இதற்காக உலக நாடுகள் ஆதரவு இல்லாமல் இஸ்ரேல் தனித்து நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அதற்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம். காஸாவில் போர் நிறுத்தம் செய்ய ஹமாஸ் விடுத்துள்ள கோரிக்கையை இஸ்ரேலால் ஏற்க முடியாது. போர் நிறுத்தம் ஏற்பட்டால் ஹமாஸ் மீண்டும் வெளியே வந்து காஸாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, இராணுவக் கட்டமைப்புகளை உருவாக்குவார்கள். மீண்டும் அவர்கள் இஸ்ரேல் மக்களை அச்சுறுத்துவார்கள். அதையெல்லாம் ஏற்க முடியாது” என்றார்.

Post a Comment

0 Comments