Ticker

6/recent/ticker-posts

தனது முகநூல் பக்கம் ஊடாக அடிப்படைவாத கருத்துகளை வெளிப்படுத்தும் பதிவை வெளியிட்ட குற்றத்தில் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது.


அடிப்படைவாத கருத்துகளை உள்ளடக்கிய முகநூல் பதிவொன்றை உருவாக்கி அதனூடாக பிரசாரம் செய்ததாக தெரிவித்து பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க நேற்று (01) உத்தரவிட்டார்.


கல்முனையைச் சேர்ந்த தாஹிபு லெப்பை ஆதம் பாவா மொஹமட் முனாஸ் என்ற வர்த்தகரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் தொடர்பாக, புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.


சந்தேக நபர் தனது பெயரில் முகநூல் பக்கத்தை உருவாக்கி அடிப்படைவாத கருத்துகளை வெளிப்படுத்தும் வகையிலான பதிவொன்றை உருவாக்கி அதனூடாக பிரசாரம் செய்துள்ளதாகவும், சில வழிபாட்டுத் தளங்கள் தாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள அவரின் பதிவுக்கு, அவரின் நண்பர்கள் சிலர் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பத்தை நியாயப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்து அந்த பதிவை பிரசாரம் செய்துள்ளதாகவும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் மேலும் குழு கருத்து தெரிவித்துள்ளனர்.


இதன் காரணமாக மக்களிடையே சமய நல்லிணக்கம் சீர்குலைந்து அதனூடாக இனங்களுக்கிடையில் ஒற்றுமையின்மை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.




இதன்போது, முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்ட நீதிமன்றம் சந்தேகநபரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதுடன் வழக்கை அன்றைய தினம் வரை ஒத்திவைத்தது.

Post a Comment

0 Comments