இந்திய மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் இன்று (19) நடைபெற்றது.
544 தொகுதிகளைக் கொண்ட இந்திய மக்களவை தேர்தலில் இன்று 102 தொகுதிகளில் மாத்திரம் வாக்குப்பதிவு முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்நாடு, அருணாச்சலப் பிரதேசம், அசாம், பீகார், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரப் பிரதேசம் , உத்தராகண்ட், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் புதுச்சேரி, அந்தமான், நிக்கோபார், ஜம்மு - காஷ்மீர், இலட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் வாக்குப்பதிவு இடம்பெற்றது.
இன்று காலை 7 மணிக்கு முதலாம் கட்ட வாக்குப்பதிவுகள் ஆரம்பமாகின.
அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் வரிசைகளில் காத்திருந்து தமது ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றினர்.
இம்முறை தேர்தலில் தமிழகத்தில் சுமார் 6 கோடியே 23 இலட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
இவர்களுள் 10.92 இலட்சம் பேர் முதன்முறையாக வாக்களிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாலை 5 மணி வரையான நிலவரப்படி, 60% வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.
இந்திய மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு எதிர்வரும் 26 ஆம் திகதி 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடங்கலாக 89 தொகுதிகளில் நடைபெறவுள்ளது.
ஜூன் மாதம் முதலாம் திகதி 7ஆம் கட்ட தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
0 Comments