ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுதிய நூல் இன்று வெளியிடப்படவுள்ளது.
மட்டக்களப்பில் இன்று குறித்த நூல் வெளியிடப்படவுள்ளது.
'ஈஸ்டர் படுகொலை" என்ற பெயரில் இந்த நூல் வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் இந்த நிகழ்வுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தரப்பினருக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான பல தகவல்கள் இந்த நூலின் ஊடாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதலை மேற்கொண்டவர்கள் தொடர்பில் தாம் அறிந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தினால் கோரிக்கை விடுக்கப்படுமாயின் அல்லது உத்தரவிடப்படுமாயின் அது தொடர்பான விபரங்களை வெளிப்படுத்துவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷ குடும்பத்தினரே நாட்டை பாரிய பிரச்சினைக்கு இட்டுச் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றமும் தமது தீர்ப்பை அறிவித்துள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் அனைவரும் அறிந்துள்ளனர்.
தமது ஆட்சி காலத்தில் கைது செய்யப்பட்ட தரப்பினருக்கு எதிராகவே தற்போது வழக்கு விசாரணைகள் இடம்பெறுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவர்கள் தொடர்பில் தகவலை வெளியிடும் போது அதனை மிகவும் ரகசியமாக வைத்திருக்க வேண்டியது, நீதிபதிகளின் பொறுப்பாகும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
0 Comments