Ticker

6/recent/ticker-posts

தங்கச் சங்கிலியை திருடிய நபர் கைது




ஹட்டன் நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் இருந்து 2,89,000 ரூபாய் பெறுமதியுடைய தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற சந்தேக நபர், ஹட்டன் பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சனிக்கிழமை (24) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொகவந்தலாவ பொலிஸ் நிலையப் பிரிவிற்குட்பட்ட கிவ் தோட்டத்தைச் சேர்ந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், ஹட்டன் நீதவான் எஸ். ராம்மூர்த்தி முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (25) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை இந்த மாதம் செவ்வாய்க்கிழமை (27) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சம்பவ தினத்தன்று, தங்கச் சங்கிலியை வாங்குவதாக கூறிய சந்தேக நபர், அதற்கான பணத்தை செலுத்த தனது மனைவி வங்கிக்குச் சென்றுள்ளதாக நகைக்கடை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவர் வரும் வரை குறித்த நகைக்கான கட்டண பட்டியலை (Bill) கொடுக்குமாறு கேட்டுக் கொண்ட நிலையில், தங்கச் சங்கிலியை ஆய்வு செய்வதாக கூறி திடீரென அதை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஹட்டன் தலைமை பொலிஸ் அதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சந்தேக நபர் அவரது மனைவியின் வீட்டில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தங்கச் சங்கிலியுடன் ஹட்டன் முதல் வட்டவளை வரை ரயில் பாதையோரமாக நடந்து சென்று, பின்னர் நாவலப்பிட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் குறித்த நகையை 1,69,000 ரூபாய்க்கு அடகு வைத்து பணம் பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பணத்தில் ஒரு தொகையை கொழும்பில் கல்வி பயிலும் தனது மகனுக்கும், மீதமுள்ள தொகையை கடனாளர்களுக்கும் வழங்கியுள்ளதாக சந்தேக நபர் கூறியுள்ளார்.

கைது நடவடிக்கையின் போது சந்தேக நபரிடமிருந்து 10,000 ரூபாய் மாத்திரமே மீட்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

க.கிஷாந்தன்

Post a Comment

0 Comments