பொகவந்தலாவ பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் நோர்வூட், சென்ஜோன் டிலரி மேல்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய புஷ்பகுமார சிந்துஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவ பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஹட்டன் நோக்கி பயணிப்பதற்காக தனியார் பேருந்து ஒன்று தயார் நிலையில் இருந்துள்ளது. இதன்போது, பேருந்தின் இயந்திரத்தை இயங்கச் செய்துவிட்டு சாரதி கீழே இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்தின் தடையாளி (Handbrake) தளர்வடைந்து, இயங்காமல் போனதன் காரணமாக பேருந்து தானாக முன்னோக்கி நகர்ந்துள்ளது.
இதனால் பேருந்தின் முன்பாக நின்று கொண்டிருந்த இளைஞன் மீது பேருந்தின் சக்கரம் (சில்லு) ஏறியதில், குறித்த இளைஞன் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
திருமணம் முடித்து வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் வசித்து வந்த இவர், தனது குழுவினருடன் இணைந்து குழாய் நீர் அகழும் வேலைத்திட்டம் ஒன்றிற்காக வவுனியாவில் இருந்து பொகவந்தலாவ பகுதிக்கு வருகை தந்திருந்த நிலையிலேயே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments