Ticker

6/recent/ticker-posts

ராஜஸ்தான்: மசூதிக்குள் புகுந்து மௌலவியை கொன்றது யார்? 3 நாளாகியும் பிடிபடாததால் மக்கள் கோபம்


ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள ராம்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்குள் ஒரு மௌலானா தடியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மூன்று நாட்கள் கடந்தும் குற்றவாளிகள் பற்றிய எந்தத் தடயத்தையும் காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.


இந்த விவகாரத்தில் விரைவில் கைது நடக்கும் என போலீசார் கூறினாலும் இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கோபம் எழுந்துள்ளது.


அஜ்மீரில் உள்ள ராம்கஞ்ச் காவல் நிலையத்தின் படிக்கட்டுகளில் ஒரு முதியவரும் சில குழந்தைகளும் ஏறிக் கொண்டிருக்கிறார்கள்.


குர்தா- பைஜாமா அணிந்த இவர்கள் அனைவரின் முகத்திலும் துக்கம் தெரிகிறது.


மௌலானா மாஹிர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்த முதியவரும், குழந்தைகளும் வாக்குமூலம் பதிவு செய்ய வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் உத்தரபிரதேசத்தில் வசிப்பவர்கள்.

மசூதியில் கொல்லப்பட்ட மௌலானா

பட மூலாதாரம், MOHARSINGHMEENA/BBCபடக்குறிப்பு, ஏப்ரல் 27 அன்று படுகொலை செய்யப்பட்ட மௌலானா முகமது மாஹிர்.


ராம்கஞ்ச் காவல் நிலையத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் கஞ்சன் நகரில் முகமதி மசூதி உள்ளது. மசூதிக்கு முன்னால் வெற்று நிலம் உள்ளது. மசூதிக்கு உள்ளே சில போலீஸ்காரர்கள் சாதாரண உடையில் அமர்ந்துள்ளனர்.


சுமார் நானூறு கெஜ நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள மசூதி வளாகத்திற்குள் நுழைந்தவுடனே வலது புறத்தில் ஒரு மசூதி தெரிகிறது. அதற்கு நேர் எதிரே ஓர் அறை உள்ளது. இந்த அறை போலீஸால் பூட்டப்பட்டுள்ளது. இந்த அறைக்குள் யாரும் செல்ல அனுமதி இல்லை. ஏப்ரல் 27ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் இதே அறையில் மௌலானா முகமது மாஹிர் தடிகளால் அடித்துக் கொல்லப்பட்டார்.


பிரேத பரிசோதனைக்குப் பிறகு, குடும்பத்தினர் மௌலானாவின் உடலை உத்தரபிரதேசத்திற்கு எடுத்துச் சென்றனர். ஏப்ரல் 28 அன்று அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.


மௌலானா கொலைக்குப் பிறகு அஜ்மீர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி முஸ்லிம் சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயம் ஏப்ரல் 28ஆம் தேதி காலை இறந்த மௌலானாவின் சித்தப்பாவும், மௌலானாவின் மாணவர்களும் ராம்கஞ்ச் காவல் நிலையத்திற்கு வாக்குமூலம் பதிவு செய்யச்சென்றனர்.


"27 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் முகமது மாஹிர் மௌல்வி கொல்லப்பட்டதாக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. நாங்கள் சம்பவ இடத்துக்குச் சென்றபோது அடையாளம் தெரியாத மூவர் வந்து அவரை தடிகளால் அடித்துக் கொன்றனர் என்று தெரிய வந்தது,” என்று இதுகுறித்து ராம்கஞ்ச் காவல் நிலைய பொறுப்பாளர் ரவீந்திர குமார் தெரிவித்தார்.


இறந்த மௌலானாவின் சித்தப்பா உத்தரபிரதேசத்தில் இருந்து வந்துள்ளார். அவருடைய வயது 50. அஜ்மீர் காவல் நிலையத்தில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் வந்துள்ளார்.


“குற்றவாளிகளை பிடித்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று போலீசார் உறுதியளித்தனர், ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை," என்றார் அவர்.


”கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்பட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்,” என்று முகமதி மசூதிக்கு அருகில் வசிப்பவரும், மௌலானாவுடன் பழகியவருமான ஷோயிப் கூறினார்.

Post a Comment

0 Comments