Ticker

6/recent/ticker-posts

படங்கள் … தொலைபேசியூடாக மகனின் சடலத்தைக் காட்டினார்


2 மாதம் கூட ஆகவில்லை : மௌலவி தொலைபேசியூடாக மகனின் சடலத்தைக் காட்டினார் - கதறும் சிறுவனின் தந்தை 

பாறுக் ஷிஹான்

மர்மமான முறையில் உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இன்று (6) மாணவன் மர்மமாக மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்ட மத்ரஸா எனும் பாடசாலைக்கு அம்பாறை சிறப்பு தடயவியல் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீனின் விசாரணைக்குப்பின்னர் குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக பெற்றோர்கள் குறிப்பிட்டதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இதே வேளை, நேற்றிரவு கைதான குர்ஆன் மத்ரஸா நிர்வாகி பாதுகாப்பாக சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், புலன்விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், குடும்பத்தில் மூத்தவரனான எனது மகன் கடந்த ஒக்டோபர் மாதம் 14ம் திகதி குறித்த மத்ரஸாவில் இணைந்ததாகவும் அவருக்கு மாதமொருமுறை 10 ஆயிரம் செலுத்தியதாகவும் இணைப்புக்கட்டணமாக ருபா 25 ஆயிரம் செலுத்தியதாகவும், 2 மாதம் கூட இன்னும் ஆகவில்லை

மௌலவி தொலைபேசியூடாக மகனின் சடலத்தைக் காண்பதாகவும் கண்ணீர் மல்க சிறுவனின் தந்தையார் குறிப்பிட்டார்.

செய்தியின் பின்னணி

13 வயதுச்சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் குர்ஆன் மதரஸா நிர்வாகி கைது - சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்

பாறுக் ஷிஹான்

13 வயது மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் மலசல கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடிக்கட்டடமொன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில் நேற்றிரவு (5) மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த எம்.எஸ்.முஸ்அப் (வயது-13) எனும் கல்வி கற்று வந்த மாணவனே தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

மத்ரஸாவில் மஹ்ரீப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில், மரணமடைந்த மாணவன் அங்கு காணப்படாததன் காரணமாக சில மாணவர்கள் தேடிய நிலையில் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அம்மாணவன் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதே வேளை, மரணமடைந்த மாணவனின் பெற்றோர், உறவினர்கள் தூக்கில் தொங்குவதற்கு எமது பிள்ளை கோழையல்ல எனவும், ஏதோவொன்று நடைபெற்றுள்ளதை ஊகிக்க முடிவதாகவும் முறையான விசாரணை அவசியம் எனக்கேட்டுக்கொண்டனர்.

இதனையடுத்து மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகம் எனக்குறித்த மற்றஸாவினைச்சுற்றி பொதுமக்கள் குவிந்தமையினால் சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்குச்சென்று நிலைமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.

மேலும், குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக பொதுமக்கள் ஒன்றுகூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது தாக்குதல் மேற்கொள்ளத்தயாரான வேளை, மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்டு, சாய்ந்தமருது பொலிஸாரால் மதரஸா நிர்வாகியான மௌலவி கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டார்.

இது தவிர, குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே பல பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் மாணவனின் மரணம் தற்கொலையல்ல எனக்கூறி பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை, அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த 15 வயதுச்சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண் கடந்த சனிக்கிழமை (2) அன்று சந்தேகத்தில் கல்முனை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.









Post a Comment

0 Comments