Ticker

6/recent/ticker-posts

சென்னை நோக்கி புறப்பட்ட கடுகதி ரயில் கோர விபத்தில் சிக்கியதில் 300 க்கும் மேற்பட்டோர் காயம் : பலர் உயிரிழந்திருக்கலாமென அச்சம் !

கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கிப் புறப்பட்ட கோரமண்டல் கடுகதி ரயில் விபத்திற்குள்ளானதில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட கோரமண்டல் கடுகதி ரயில் இன்று (2) இரவு சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பெங்களூருவில் இருந்து கொல்கத்தா சென்ற ரெயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துள்ளானது. 

இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் 300 க்கும் மேற்பட்ட பயணிகள் கயமடைந்தனர். இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படகின்றது.

மீட்புக் குழு விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்றடைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விபத்து நிவாரண ரயில் விரைந்துள்ளதாக தென் கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

மேலும், 50 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து காயம் அடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளன. 

உள்ளூர் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள், கல்லூரிகள் தயார் நிலையில் இருக்கும் வகையில் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

காயம் அடைந்துள்ள பயணிகள் சிகிச்சைக்காக பாலசோர் மெடிக்கல் கல்லூரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 300 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் படுகாயத்துடன் சிகிக்கை பெறுகின்றனர். 22 பேர் அடங்கிய தேசிய மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.



எனினும் ரயில் விபத்து பற்றிய முழுமையான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. வனப்பகுதியில் இந்த விபத்து நடைபெற்று இருப்பதாகவும் இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்பு பணிகள் இடம்பெறுவதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ளனர்.



இந்தியப் பிரதமர் மோடி இரங்கல்

இந்த ரயில் விபத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒடிசாவில் இடம்பெற்ற ரயில் விபத்தால் வேதனை அடைந்துள்ளேன். துக்கத்தின் இந்த நேரத்தில், என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் பேசினேன். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன என பதிவிட்டுள்ளார்.








Post a Comment

0 Comments