உயிரணு தானம் மூலம், குறைந்தபட்சம் 550 பிள்ளைகளுக்குத் தந்தையானதாக கருதப்படும் நபர் ஒருவர், மேலும் உயிரணு தானம் செய்வதற்கு தடை விதித்து நெதர்லாந்து நீதிமன்றம் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டுள்ளது.
இந்நபர் 41 வயதான 'ஜொனதன் எம்' என மாத்திரம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். உயிரணு தானம் மூலம் பிறந்த பிள்ளைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பு ஒன்றும், அவரின் உயிரணு தானம் மூலம் பிள்ளையொன்றுக்குத் தாயான பெண்ணும் இந்நபரை நீதிமன்றத்துக்கு இழுத்திருந்தன.
நெதர்லாந்து வழிகாட்டல்களின்படி, ஆண் ஒருவர், விந்தணு தானம் ஊடாக அதிகபட்சமாக 12 பெண்கள் மூலம், அதிகபட்சம் 25 குழந்தைகளையே பெற முடியும்.
ஆனால், தனது விந்தணு தான வரலாறு குறித்து, இந்நபர் பெண்களிடம் பொய் கூறினாரென குற்றம் சுமத்தப்பட்டது.
வேறு வழியில் கருத்தரிக்க முடியாத பெற்றோருக்கு ஜொனதன் எம் உதவ விரும்பினார் என அவரின் சட்டத்தரணி நீதிமன்றில் கூறினார்.
ஆனால், இந்நபர் 2017 ஆம் ஆண்டு முதல் 550 முதல் 600 பிள்ளைகளைப் பெறுவதற்கு உதவியுள்ளார் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதனால், புதிய பெற்றோர்களுக்கு ஜொனதன் எம் உயிரணு தானம் செய்வதற்கு தடை விதிப்பதாக நீதிபதி தேரா ஹெஸ்லிங்க் அறிவித்தார்.
உயிரணு தானம் செய்யும் நோக்குடன் எந்தவொரு பெற்றோரையும் தொடர்பு கொள்வதற்கும் தனது சேவை குறித்து விளம்பரம் செய்வதற்கும் அந்நபருக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த உத்தரவுகளை மீறி உயிரணு தானம் செய்யும் ஒவ்வொரு தடவையும் 100,000 யூரோ அபாராதம் உட்பட மேலதிக அபராதங்களை செலுத்த வேண்டும் என நீதிபதி கூறினார்.
இந்நபர், காட்டுத் தீ போன்று பெரும் எண்ணிக்கையான விந்தணு தானம் செய்வதை நிறுத்தியமைக்காக நீதிமன்றத்துக்கு தான் நன்றி கூறுவதாக வழக்குத் தொடுத்த, 'ஈவா' என அடையாளப்படுத்தப்பட்ட பெண் கூறியுள்ளார்.
ஜொனதன் எம்மின் நூற்றுக்கும் அதிகமான பிள்ளைகள் நெதர்லாந்தில் பிறந்துள்ளன. ஆனால், டென்மார்க் மருத்துவமனையில் கிறையோஸ் என்ற பெயரில் உயிரணு தானம் செய்ததாகவும், அந்த உயிரணுக்கள், வேறு நாடுகளிலுள்ள தனியார் முகவரிகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகளைக் கொண்ட பெரும் உறவினர் வலையமைப்பொன்றில் தமது பிள்ளைகள் இருக்கும் நிலையை பெற்றோர்கள் எதிர்கொண்டுள்ளனர் எனவும், இப்பிள்ளைகளுக்கு எதிர்மறையான உளவியல் விளைவுகள் ஏற்பட சாத்தியம் உள்ளதாக தான் கருது வதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉
0 Comments