கொழும்பு முதல் வெலிமட வரை பயணித்த ஒரு நபர், பேருந்தில் உறங்கியதால் தனது இலக்கை தவறவிட்டு, அறியப்படாத ஊர் ஒன்றில் இறங்கி உள்ளார்..
இந்நிலையில் இவர் திருடன் என தவறாக எண்ணிய கிராமவாசிகளால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதை அறிந்த அவர், மனமுடைந்து தற்கொலையும் செய்து கொண்டார்.
பாதிக்கப்பட்டவர், புஸ்ஸல்லாவாவில் உள்ள ரோத்ஸ்சைல்ட் எஸ்டேட்டைச் சேர்ந்த ராமச்சந்திரன் புவனேஸ்வரன் என்ற முரளி (34).
இவரது பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், ஒரே சகோதரி வேறு பகுதியில் வசித்து வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முரளி, ரோத்ஸ்சைல்ட் எஸ்டேட்டுக்கு செல்லும் வழியில் பேருந்தில் உறங்கிவிட்டதால், அதிகாலை 2.00 மணியளவில் ரம்போட பகுதியில் இறங்கியுள்ளார்.
வேறு வழியின்றி, ரம்போடாவில் வசிக்கும் உறவினர் ஒருவரைத் தேடி செல்ல முடிவு செய்த அவர், துரதிர்ஷ்டவசமாக வழி தவறியுள்ளார்.
உதவி கோரி ஒரு வீட்டின் கதவைத் தட்டியபோது, அங்கிருந்தவர்கள் அவரை திருடன் என தவறாக எண்ணி, அக்கம்பக்கத்தினரை எச்சரித்து கூச்சலிட்டனர்.
இதையடுத்து, கூடிய கிராமவாசிகள் அவரை கடுமையாக தாக்கி, ஒரு மரத்தில் கட்டி வைத்து, கொ த்மலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணைகளில் முரளி நிரபராதி என தெரியவந்ததை அடுத்து, காவல்துறை அவரை பிணையில் விடுவித்து, மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் ரோத்ஸ்சைல்ட் எஸ்டேட்டில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைத்தது.
எனினும், அவரை தாக்கியவர்கள் இந்த சம்பவத்தின் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், மனமுடைந்த முரளி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோத்மலை காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி வாஜிர ரத்நாயக்க மேற்கொண்டு வருகிறார்.
0 Comments