Ticker

6/recent/ticker-posts

ஷண்முகா அபாயா விவகாரம் : அதிபர் லிங்கேஸ்வரிக்கு சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஆஜரானார் - அதிபர் லிங்கேஸ்வரியைத்தான் பஹ்மிதா றமீஸ் அவர்கள் தாக்கினார்கள் எனவும் வாதிட்டார் .


றாஸி முஹம்மட் - 

திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முஸ்லிம் கலாச்சார ஆடையான அபாயாவை அணிந்து கொண்டு கடமை ஏற்கச் சென்ற ஆசிரியை பஹ்மிதா றமீஸ் அவர்களை கடமை ஏற்க விடாமல் தடுத்து பாடசாலையை விட்டு விரட்டி விட்டமை சம்பந்தமான விடயத்தில் பாடசாலை அதிபர் திருமதி. லிங்கேஸ்வரி ரவிராஜன் அவர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் அதிபர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் ஆஜராகி வழக்கை வாபஸ் பெறுமாறும் பெறாவிட்டால் ஆசிரியை பஹ்மிதா றமீஸ் கடுமையான இழப்பீடுகளை செலுத்த வேண்டி வரும் என்றும் எச்சரித்தார்.

ஆசிரியை பஹ்மிதா றமீஸ் அவர்கள் ஷண்முகா அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராகத் தொடுத்த வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் கௌரவ. பயஸ் றஸ்ஸாக் முன்னிலையில் விளக்கத்திற்கு ஏலவே நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆசிரியை பஹ்மிதா றமீஸ் சார்பாக குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான அப்துல் சுபையிர், சட்டத்தரணி றதீப் அகமட் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.


எதிரி லிங்கேஸ்வரிக்கு சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனோடு சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர்.

ஆசிரியை பஹ்மிதா றமீஸை பதவி ஏற்க விடாமல் தடுத்த அதிபர் லிங்கேஸ்வரிக்கு சார்பாக ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தன்னுடைய சமர்ப்பணத்தில் இவ்வழக்கு பொய்யாகப் புனையப்பட்ட ஒரு வழக்கென்றும் அதிபரைத்தான் பஹ்மிதா றமீஸ் அவர்கள் தாக்கினார்களே ஒழிய அதிபரால் பஹ்மிதா றமீஸுக்கு எந்த பங்கமும் விளைவிக்கப்ப்டவில்லை என்றும் இவ்வழக்கினை வாபஸ் பெறாவிட்டால் கனதியான நட்டஈடுகளை செலுத்த வேண்டி நேரிடும் என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த சட்டத்தரணி றதீப் அகமட் அவர்கள், இந்தப் பிரச்சினையில் முஸ்லிம் கலாச்சார ஆடையான அபாயாவினை அணிந்து செல்ல அனுமதிக்காமையானது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்றும் இவ்வாறான இன ரீதியான குற்ற அணுக்கங்கள் எதிர்காலத்தில் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்கு தொடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.

இருதரப்பினரும் இணக்கப்பாடு ஒன்றிற்கு வருவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்வதற்கு அவகாசம் ஒன்றினை வழங்குவதற்காக எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதிக்கு இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற ஒரு இந்துப் பாடசாலையில் ஒரு முஸ்லிம் ஆசிரியையால் தன்னுடைய கலாச்சார ஆடையான அபாயாவை அணிந்து கொண்டு தனது அரச கடமையைச் செய்வதற்கு சாத்தியமே இல்லாத சூழ்நிலையில் வடகிழக்கு இணைக்கப்படும் பொழுது இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களின் கலாச்சார உரிமைக்கான உத்தரவாதம் எப்படிக் கிடைக்கும் என்ற கேள்வி எழுவது நியாயமானது. 

தமிழ் முஸ்லிம் இன நல் உறவுகளை உரக்கப் பேசும் சுமந்திரன் போன்ற அரசியல்வாதிகள் முஸ்லிகளின் கலாச்சார உரிமையை மறுக்கின்றவர்களைக் காப்பாற்ற நினைப்பது ஒரு பெரும் முரண் நகையாகும்.
- றாஸி முஹம்மட் - 

மேழும் தகவலை பெற்றுக்கொள்வதற்கு 🫵👇

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6



Post a Comment

0 Comments