ரஷ்ய போர் விமானம் ஒன்றுடன் மோதிய மோதிய அமெரிக்காவின் ஆளில்லா விமானம் (ட்ரோன்) கடலில் வீழ்ந்ததாக அமெரிக்கப் படையினர் தெரிவித்துள்ளனர்.
கருங்கடல் பகுதியில், சர்வதேச வான்பரப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எம்.கியூ 9 றீப்பர் ரக ஆளில்லா விமானமே இவ்வாறு வீழ்ந்துள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் ஐரோப்பிய கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளது. இது 20 மீற்றர் (66 அடி) அகலமான விமானமாகும்.
இவ்விமானத்தை ரஷ்யாவின் இரு இடைமறித்ததாகவும் அவற்றில் ஒரு விமானம், அமெரிக்காவின் ட்ரோன் மீது எரிபொருளை கொட்டியதாகவும் அதன்பின் ரஷ்ய விமானத்துடன் ட்ரோன் மோதியதாகவும் அமெரிக்கப் படையினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, இந்த ட்ரோன் விமானம் அதன் தொடர்புசாதனங்களை நிறுத்திவிட்டு பயணித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அதனுடன் ரஷ்ய விமானங்கள் நேரடியாக தொடர்புபடவில்லை என ரஷ்யா கூறியுள்ளது.
இந்த ரக விமானங்கள் கண்காணிப்பு மற்றும் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படக்கூடியவை ஆகும். 15000 மீற்றர் (50,000 அடி உயரம் வரை பறக்கக்கூடிய இவ்விமானங்கள், 1,770 கிலோமீற்றர்கள், (1,100 மைல்கள்) வரை செல்லக்கூடிவை.
இச்சம்பவம் குறித்து தனது எதிர்ப்பை தெரிவிப்பதற்காக ரஷ்ய தூதுவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்விமானம் தவறான கைகளுக்கு செல்வதை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புச் பேச்சாளர் ஜோன் கேர்பி கூறியுள்ளார்.
0 Comments