Ticker

6/recent/ticker-posts

அலவத்துகொடை கொலைச் சம்பவம்: இராணுவ வீரர் கைது!


எம்.வை.எம்.சியாம்)

கண்டி, அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகம பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு வயல் பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இராணுவ வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த 25 வயதுடைய பெண்ணின் சடலம், அவரது வீட்டுக்கு அருகிலுள்ள வயல் பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்து கிராம மக்களால் நேற்று (11) சனிக்கிழமை மீட்கப்பட்டது. 

அப்பெண்ணின் கணவர் மரண வீடொன்றில் நிகழும் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த வேளையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் வீட்டில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சந்தேக நபரின் வீட்டுக்கு சென்ற பொலிஸார், பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.

இந்நிலையில் 38 வயதுடைய சந்தேக நபர் முன்னதாக துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருந்தமையினால் சிகிச்சைக்கு பின்னர் தற்போது இராணுவத்தில் சாதாரண கடமைகளில் பணிபுரிவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் அலவத்துகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments