Ticker

6/recent/ticker-posts

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் தங்காலை மத்திய தடுப்பு முகாமிற்கு மாற்றம்..

 பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களம் என்பன அவர்கள் தொடர்பில் தனியாக விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.


90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூன்று மாணவர் செயற்பாட்டாளர்கள் தங்காலை மத்திய தடுப்பு முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஹஷாந்த குணதிலக்க, அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

அரச துரோக சதித்திட்டம் இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்வதுடன், பயங்கரவாத குற்றச்சாட்டுகள் தொடர்பில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இதனிடையே, சந்தேகநபர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு அவர்களை சந்திப்பதற்கு வாரத்திற்கு ஒரு தடவை சந்தர்ப்பம் வழங்குவதாக சட்டத்தரணி நுவன் போபகேயிற்கு கடிதம் ஒன்றின் மூலம் பயங்கராத தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

கிராம சேவை உத்தியோகத்தரிடம் இருந்து  நெருங்கிய உறவினர்கள் என்பதனை உறுதிப்படுத்தும் கடிதமொன்றை அவர்கள் எடுத்து வர வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 18  ஆம் திகதி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது,  வசந்த முதலிகே உள்ளிட்ட 19 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், அதில் 15 பேருக்கு நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments