தனது கணவனை படுக்கையில் வைத்து சுட்டுக்கொல்லுமாறு தனது காதலனை கோரியதாக ஒப்புக்கொண்ட அமெரிக்கப் பெண்ணொருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.
வேறு ஆண்களுடன் கூட்டாக பாலியல் உறவில் ஈடுபடுமாறு தன்னை அடிக்கடி நிர்ப்பந்தித்ததால் கணவனை கொல்வதற்கு தான் தீர்மானித்ததாக அப்பெண் கூறியுள்ளார்.
ஒக்லஹாமா மாநிலத்தைச் சேர்ந்த கிறிஸ்டி இவான்ஸ் எனும் 49 வயதான பெண்ணுக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டது.
கிறிஸ்டி இவான்ஸும் சமயப் போதகரான அவரின் கணவர் டேவிட் இவான்ஸும் 3 தசாப்த காலமாக இணைந்து வாழ்ந்தவர்கள். இவர்களுக்கு 3 பிள்ளைகளும் உள்ளனர்.
ஆனால், அவர்களின் அந்தரங்க வாழ்க்கை விபரீதமாக இருந்தது. வேறு ஆண்களுடன் கூட்டாக பாலியல் உறவில் ஈடுபடுமாறு தனது கணவர் இவான்ஸ் தன்னை அடிக்கடி வற்புறுத்தினாரென நீதிமன்றத்தில் கிறிஸ்டி இவான்ஸ் தெரிவித்தார்.
இத்தொந்தரவை பொறுக்க முடியாமல், தனது கணவர் இவான்ஸை படுக்கையில் வைத்து சுட்டுக்கொல்லுமாறு காதலன் கலீல் ஸ்கொயாரை தான் கோரியதாக நீதிமன்றதில் கடந்த வாரம் கிறிஸ்டி இவான்ஸ் ஒப்புக்கொண்டார்.
கூட்டாக பாலியல் உறவில் ஈடுபடுவதற்காக 27 வயதான கலீல் ஸ்கொயரை இத்தம்பதியினர் முதல் தடவையாக கடந்த வருட முற்பகுதியில் சந்தித்தனர்.
எனினும் பின்னர் கலீல் ஸ்கொய்ருக்கும் கிறிஸ்டி இவான்ஸுக்கும இடையில் இரகசிய உறவு ஆரம்பமாகியது. 2021 மார்ச் 22 ஆம் திகதி தனது வீட்டில் டேவிட் இவான்ஸ் உறங்கிக் கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.
வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர் ஒருவர் இக்கொலையைச் செய்துள்ளதாக முதலில் கிறிஸ்டி கூறினார்.
எனினும், இக்கொலைக்கு தானும் உடந்தை என்பதை கிறிஸ்டி பின்னர் ஒப்புக்கொண்டார். இக்குற்றம் தன்னை 'உயிருடன் திண்பதாக' உணர்ந்ததால் குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கு தான் தீர்மானித்ததாக அவர் கூறினார்.
இதையடுத்து கிறிஸ்டியும் கலீல் ஸ்கொயரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கிறிஸ்டி இவான்ஸுக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ஸ்டீவன் கேசிங்கர் தீர்ப்பளித்தார். 2060 ஆம் ஆண்டின் பின்னரே அவர் பரோலில் வெளிவருவற்கு தகுதி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேறு ஆண்களுடன் பாலியல் உறவு கொள்ளுமாறு தன்னை நிர்ப்பந்தித்த கணவன், சில வேளைகளில் ஒரே நேரத்தில் பலருடன் பாலியல் உறவுகொள்ளுமாறு நிர்ப்பந்தித்ததாகவும் நீதிமன்றத்தில் கிறிஸ்டி இவான்ஸ் கூறினார்.
மொத்தமாக 50 முதல் 100 ஆண்களுடன் பாலியல் உறவுகொண்டதாகவும் அவர் கூறினார்.
கிறிஸ்டி இவான்ஸ் தனது நடவடிக்கைக்கு பொறுப்பேற்பதாகவும், என்ன தண்டனை விதித்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளார் எனவும் அவரின் சட்டத்தரணி ஜோய் மிஸ்கெல் கூறினார்.
இத்தம்பதியின் 29 வயதான மகள், 2 மகன்மாரில் ஒருவரும் தனது தந்தையின் துன்புறுத்தல்கள் குறித்து விபரித்தனர். தம்மை தந்தை தலையில் தாக்குவார் எனவும், தலைமுடியைப் பிடித்து தூக்குவார் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
தமது தந்தையின் நடவடிக்கை குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த பின்னர், பிள்ளைகள் மூவரும் தாத்தா பாட்டியிடம் தங்கவைக்கப்படும் அளவுக்கு இத்துன்புறுத்தல்கள் மோசமாக இருந்தன எனவும் அவர்கள் கூறினர்.
கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ள கலீல் ஸ்கொயரும் குற்றச்சாட்டை ஒப்புக்கொண் டுள்ளார். எதிர்வரும் 25 ஆம் திகதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டுள்ளார்.
0 Comments