Ticker

6/recent/ticker-posts

தடை நீக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுக்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!


 தடை நீக்கப்பட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள், பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மீண்டும் உறுதியானால், மீண்டும் அவர்களை கருப்புப்பட்டியலில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.



ஐக்கிய நாடுகள் சபையின் 2012 ஆம் ஆண்டு விதிமுறைகள் இல. 1 இன் பிரகாரம் பயங்கரவாதத்திற்கு நிதியுதவியளித்தல் தொடர்பில் 2021 ஆம் ஆண்டில் 18 அமைப்புகள் கருப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், 577 நபர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், புலனாய்வு பிரிவுகள், சட்ட அமுலாக்கள் பிரிவினர் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு அடங்கிய குழுவொன்றினூடாக, பயங்கரவாதத்திற்கு நிதியுதவியளித்தல் தொடர்பில் மேற்குறிப்பிடப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புகளின் செயற்பாடுகள் குறித்து கடந்த சில ஆண்டுகளாக ஆய்வு செய்யப்பட்டன.

அவற்றில் கிடைத்த ஆதாரங்களுக்கமைய பாதுகாப்பு அமைச்சில் நடாத்தப்பட்ட பல சுற்று கலந்துரையாடல்களுக்குப் பின், கறுப்புப் பட்டியலிலிருந்து நீக்கப்பட மற்றும் சேர்க்கப்பட வேண்டிய நபர்கள் மற்றும் அமைப்புகள் குறித்து பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

அதனடிப்படையில், 577 நபர்கள் மற்றும் 18 அமைப்புகளிலிருந்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவியளித்தல் செயற்பாடுகளில் ஈடுபாடு காட்டாத 316 நபர்கள் மற்றும் 6 அமைப்புகளை பட்டியலிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும், தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவியளித்தல் தொடர்பில் சமீபத்தில் இனம்காணப்பட்ட 55 நபர்கள் மற்றும் 3 அமைப்புகளை புதிதாக அப்பட்டியலில் உள்ளடக்கவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, பாதுகாப்புச் அமைச்சின் பரிந்துரையின் பேரில் கடந்த ஜூன் 29, அன்று வெளிவிவகார அமைச்சின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பின், 316 நபர்கள் மற்றும் 15 அமைப்புகள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு கடந்த முதலாம் ஆம் திகதி,  இல 2291/02 அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவியளித்தல் தொடர்பில் நபர்கள் மற்றும் அமைப்புகள் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கல் மற்றும் அகற்றல் நடைமுறையானது, அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களின் நீண்ட கால அவதானிப்பு மற்றும் தொடர் ஆய்வு நடவடிக்கைகளின் பின்னர் மேற்கொள்ளப்பட்டு வருவது வழமையாகும்.

Post a Comment

0 Comments