தமது உடலில் பெற்றோலை ஊற்றிக்கொண்டு, எரிபொருள் நிலையங்களை தகர்க்கப் போவதாக அச்சுறுத்திய குற்றச்சாட்டில்,இரட்டைச் சகோதரிகளான யுவதிகள் இருவர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கென்டபரி கிறவுண் நீதிமன்றத்தில் அரச தரப்பு சட்டத்தரணி விஷால் மிஸ்ரா வாதாடுகையில், பெத்தானியும் பிரிட்டானியும் கென்டபரி லேக்சைட் எரிபொருள் நிலையத்தில் இருப்பதாக அதகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
தாம் தற்கொலை செய்யப்போவதாகவும் அந்த எரிபொருள் நிலையத்தை தகர்க்கப்போவதாகவும் தொலைபேசி மூலம் தெரிவித்தனர்.
எஸ்ஸோ எரிபொருள் நிலையத்தையும் தீக்கிரையாக்கப் போவதாக பெத்தானி லீ கூறினார்' என்றார்.
20 நிமிடங்களின் பின்னர் பொலிஸார் அங்கு வந்தபோது, பொலிஸார் தம்மை நெருங்கினால், தம்மை தீக்கிரையாக்கிக் கொள்ளப் போவதாக, இரட்டைச் சகோதரிகள் இருவரும் எச்சரித்தனராம்.
லைட்டர் ஒன்றை பற்ற வைப்பதற்கு பிரிட்டானி முயன்றார். அது எரியாத நிலையில், அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடினர். சிறிது தூரரம் துரத்திச் செல்லப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர் எனவும் சட்டத்தரணி விஷால் மஜஸ்ரா கூறினார்.
கெமராக்களில் பதிவாகியிருந்த வீடியோக்களும் நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்டன.
அதிகாலை 3 மணியளவில் இச்சகோதரிகள் எரிபொருள் நிலையங்களில் வைத்து பெற்றோலை தமது உடலில் ஊற்றிக்கொள்வதுடன், பொலிஸாரை தகாத வார்த்தைகளால் திட்டும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியிருந்தன.
இவர்கள் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களின் முகங்களில் பல வெட்டுக் காயங்களும் உராய்வுக் காயங்களும் காணப்பட்டன.
இவர்கள் ஏற்கெனவே போதையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது.
இவர்கள் இருவரும் மனநிலை பாதிப்பு கொண்டவர்கள் அல்லர் என உளவியலாளர்கள் தெரிவித்திருந்தனர். எனினும் இச்சகோதரிகள் சிறு வயதிலிருந்து உணர்ச்சி ஸ்திரமின்மையைக் கொண்டிருந்தவர்கள் என அவர்களின் சட்டத்தரணி கூறினார்.
பெத்தானி மற்றும் பிரித்தானியின் செயற்பாடுகள் அவர்களுக்கும் எரிபொருள் நிலையத்தில் இருந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது என்பது நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இச்சகோதரிகள் இருவரும், உயிர் களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை பொருட்படுத்தாமல் தீக்கிரையாக்கும் முயற்சியில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றவாளிகள் என ஒப்புக்கொண்டனர். அதையடுத்து அவர்களுக்கு தலா 3 வருடங்கள் மற்றும் 9 மாத சிறைத்தண் டனை விதித்து கென்டபரி கிறவுண் நீதிமன்றம் கடந்தவாரம் தீர்ப்பளித்தது.
0 Comments