மதுரங்குளிய, 10ஆம் கட்டை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களிடம், QR குறியீட்டை கேட்ட ஊழியரை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், தங்களுடைய வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புமாறு ஊழியரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அந்த ஊழியர், எரிபொருள் வழங்குவதற்கான QR குறியீட்டைக் (QR Code) காட்டுமாறு கோரியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், "நாங்கள் மதுரங்குளியை சேர்ந்தவர்கள்; எங்களுக்கு என்ன QR குறியீடு வேண்டிக்கிடக்கிறது?" எனக் கூறி, தகாத வார்த்தைகளால் திட்டி, அந்த ஊழியரை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் தலைக்கவசம் அணியாமல் வந்திருந்ததாகவும், அவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் அங்கிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
சந்தேகநபர்கள் மதுரங்குளி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மதுரங்குளிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments