Ticker

6/recent/ticker-posts

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவை உடனடியாக கைது செய்ய உத்தரவு


 சுற்றுலா மேம்பாட்டுப்பணியகத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID)சட்டவிரோத சொத்துக்கள் பிரிவிற்கு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.

நிதி முறைகேடு தொடர்பான நீதவான் விசாரணை இன்று (17) நீதிமன்றத்தின் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது ​​நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் கலிங்க இந்ததிஸ்ஸ, மூன்றாவது சந்தேகநபர் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 127-வது பிரிவின் கீழ் இரகசிய வாக்குமூலம் அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2014-ஆம் ஆண்டில் சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 7.8 மில்லியனை அதன் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகச் செலவிடாது, ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான 12,000 டி-ஷர்ட்டுகளை அச்சிட்ட சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோதச்சொத்துக்கள் பிரிவு நீதிமன்றத்தில் அறிக்கையளித்திருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக காவலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் (SLTPB) முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜாஃபரை, தலா ரூ. 10 இலட்சம் மதிப்புள்ள இரண்டு சரீர பிணைகளிலும், சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த சந்தேகநபர்கள் மீது பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

‘பி’ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த சம்பவம் தொடர்பாகச் சந்தேகநபராக பெயரிடப்படுவாரா என்று நீதிபதி குற்றப்புலனாய்வுத்துறையிடம் விசாரித்துள்ளார்.

இதன்போது, ​​இது தொடர்பாக அரச வழக்கறிஞரின் அறிவுறுத்தல்கள் இன்னும் பெறப்படவில்லை என்று குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளதாக நீதிபதி திறந்த நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

“இந்த சம்பவத்தின் மூன்றாவது சந்தேகநபரான நிர்வாக பணிப்பாளரும் ‘பி’ அறிக்கையில் பெயரிடப்பட்ட சந்தேகநபரான நிதி பணிப்பாளரும், சம்பவம் தொடர்பான முதல் மற்றும் மூன்றாவது பற்றுச்சீட்டுகளில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நிதி பணிப்பாளர் இன்னும் கைது செய்யப்படாததால், மூன்றாவது சந்தேகநபருக்கு பிணை வழங்கப்படுகிறது.” அதன்படி, இந்த வழக்கில் மூன்றாவது சந்தேகநபரான நிர்வாக பணிப்பாளர் ரூமி ஜாஃபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு அக்டோபர் 14 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் இரண்டாவது சந்தேகநபரான, பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஸ்வர குணவர்தனவை பிணையில் விடுவிக்குமாறு முந்தைய விசாரணையில் (10) நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments