2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் போது, தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள ரிட் மனு (Writ Petition), இன்று (17) பிற்பகல் 1.30 மணிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா முன்னிலையாகவுள்ளார்.
இன்று காலை இந்த விடயம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இந்த மனு தொடர்பான ஆவணங்கள் இன்று காலை 8.00 மணியளவில் தான் கிடைத்ததாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். அத்துடன், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளிடமிருந்து மேலதிக அறிவுறுத்தல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரியவுடன் அமர்வில் இருந்த நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ, இந்த மனுவை விசாரணை செய்வதிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

0 Comments