![]() |
| Ai iamge |
கனகராஜா சரவணன் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற வீதியில் உள்ள வீடு ஒன்றில், 11 வயதுடைய தனது சொந்தத் தங்கையைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, குளியலறைத் தண்ணீர் தொட்டியில் வீசிய குற்றச்சாட்டின் கீழ் 14 வயது சிறுவன் ஒருவனை இன்று சனிக்கிழமை (30) ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை (28) மாலையில், ஏறாவூர் 5ஆம் பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சத்யானந்தன் சதிஷா என்ற சிறுமி, குளியலறைத் தண்ணீர் தொட்டிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னணி மற்றும் பொலிஸ் விசாரணை: இச்சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், தந்தை சம்பவ தினத்தன்று வேலைக்காக வெளியே சென்றிருந்தார். இதனால் 14 வயதுடைய அண்ணனும், 11 வயதுடைய தங்கையும் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது, தங்கை வைத்திருந்த கைபேசியில் (மொபைல் போன்) 'டிக் டாக்' (TikTok) பார்ப்பதற்காக அண்ணன் கேட்டுள்ளார்.
அதற்குத் தங்கை மறுக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அண்ணன், தங்கையின் கழுத்தை நெரித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குற்றத்தை மறைக்க முயற்சி: தங்கை உயிரிழந்ததைக் கண்ட சிறுவன், கொலையை மறைப்பதற்காக அவரது உடலை இழுத்துச் சென்று குளியலறையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் போட்டுள்ளார். பின்னர், எதுவுமே நடக்காதது போல் வீட்டிலிருந்து பக்கத்து வீட்டுக்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்தின் பின் தந்தை வீட்டிற்கு வந்தபோது பிள்ளைகளைக் காணாததால் தேடியுள்ளார். அப்போது குளியலறைத் தண்ணீர் தொட்டிக்குள் 11 வயது மகள் மயங்கிக் கிடப்பதைக் கண்டு, அவரை மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்துப் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், 14 வயது சிறுவன் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவரே தனது தங்கையைக் கொலை செய்தார் என்பது உறுதியானது. இதனையடுத்து அச்சிறுவனைக் கைது செய்துள்ள பொலிஸார், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்

0 Comments