Ticker

6/recent/ticker-posts

விடுதலைப் புலிகள் கொன்றதாக கூறப்படும் 170 முஸ்லிம்கள் உடல்களை தோண்டி மத முறைப்படி அடக்கம் செய்யக் கோரிக்கை




மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் பிரதேசத்தில் வைத்து கடத்தி, படுகொலை செய்து, அங்கேயே புதைக்கப்பட்ட சுமார் 170 முஸ்லிம்களின் உடல்களையும் தோண்டியெடுத்து, இஸ்லாமிய முறைப்படி மீளவும் அடக்கம் செய்வதற்கு சிபாரிசு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வலிந்து காணாமலாக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் 'காத்தான்குடி பள்ளிவாயில்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்' இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.


மேற்படி ஆணைக்குழு முன்பாக - காத்தான்குடி பள்ளிவாயில்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.எம். ரஊப் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார்.


1990ஆம் ஆண்டு ஜுலை 12ஆம் தேதி - கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக வாகனங்களில் பயணித்துக் கொண்டிருந்த முஸ்லிம் பொதுமக்களை - தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர், ஆயுதமுனையில் கடத்திப் படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது.


இவ்வாறு கொலை செய்யப்பட்ட அனைவரும் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியைச் சேர்ந்தவர்களாவர்.

ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டுத் திரும்பியோர், தொழிலுக்காக வெளியூர் சென்று வந்தோர் உட்பட பலர் - இதன்போது கடத்திப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்.


இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களையே, தோண்டியெடுத்து, இஸ்லாமிய முறைப்படி மீளவும் அடக்கம் செய்வதற்கு சிபாரிசு செய்யுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான ஆயுத மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் இந்தச் சம்பவம் நடந்ததாக, காத்தான்குடி பள்ளிவாயில்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.எம். ரஊப் - பிசிசி தமிழிடம் கூறுகிறார்.


தமிழர்கள் வாழும் பிரதேசமான குருக்கள் மடத்தில், சம்பவ நாள் காலை தொடக்கம் மாலை வரையில், புலிகள் இயக்கத்தவர்களால் கடத்தப்பட்ட முஸ்லிம்கள் ஓரிடத்தில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், வேறோர் இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு - படுகொலை செய்யப்பட்டார்கள் என, அவர் தெரிவிக்கின்றார்.


இந்த படுகொலை நடைபெற்று 20 நாட்களுக்குப் பின்னர்தான் (03 ஆகஸ்ட் 1990), காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களில் இரவு நேரம் தொழுது கொண்டிருந்தவர்கள் மீது, விடுதலைப் புலிகள் அமைப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றும், அதில் 103 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் என்றும் ரஊப் குறிப்பிட்டார்.


"சம்பவ தினம் - குருக்கள் மடம் பகுதி வீதி ஓரங்களில் அதிக அளவிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் நிற்பதாக கேள்வியுற்றோம். அன்று காலையில் இருந்து, கல்முனை - மட்டக்களப்பு வீதியால் பயணித்த காத்தான்குடி முஸ்லிம்களை புலிகள் கடத்தியிருந்தனர். பிற்பகல் இரண்டரை மணியளவில்தான் எமக்கு அதனை உறுதிப்படுத்த முடிந்தது. மாலை 5.00 மணியளவில் ஊர் அல்லோலகல்லோலப்பட்டது” என, அன்றைய சம்பவம் குறித்து ரஊப் விவரித்தார்.

காத்தான்குடியிலிருந்து குருக்கள் மடம் சுமார் 13 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது

இந்த சம்பவத்தில் தன்னுடைய தாய் மாமன் (தாயின் மூத்த சகோதரர்), மச்சான் (மாமியின் மகன்) ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டதாகவும் ரஊப் தெரிவித்தார்.


மூன்று கோரிக்கைகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் குருக்கள் மடம் படுகொலை தொடர்பில் மூன்று கோரிக்கைகளை தாம் முன்வைத்துள்ளதாக ரஊப் குறிப்பிட்டார்.


குருக்கள் மடத்தில் 170 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டு, அந்த உடல்கள் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும். அந்தப் படுகொலை ஏன் மேற்கொள்ளப்பட்டது என்பதை சுயாதீன ஆணைக்குழு ஒன்றின் மூலம் ஆராய்ந்து கண்டறிய வேண்டும்.


நாட்டில் நடந்த யுத்தத்தின் போது முஸ்லிம்களுக்கும் இவ்வாறான பெரும் அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளமையை சர்வதேச சமூகத்துக்குத் தெரியப்படுத்துதல் வேண்டும் என்பனவே தாம் முன்வைத்த - மூன்று கோரிக்கைகள் என', காத்தான்குடி பள்ளிவாயில்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் ரஊப் கூறினார்.


2 மாதங்களில் உடன் பிறந்தோர் இருவரை இழந்தவரின் கதை


குருக்கள் மடம் படுகொலைச் சம்பவத்தில் தனது தம்பியைப் பறிகொடுத்தவர் காத்தான்குடியைச் சேர்ந்த பௌசுல் ஹினாயா. அப்போது தனது தம்பிக்கு 22 வயது என்கிறார். அந்த இழப்புக் குறித்து பிபிசியிடம் பேசிய அவரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.


”வீட்டில் நாங்கள் 06 பிள்ளைகள். ஆண்கள் நான்கு பேர், பெண்கள் இருவர். எனக்கு இளைய சகோதரரரான பௌசுல் அமீர் என்பவரைத்தான் குருக்கள் மடத்தில் புலிகள் கடத்திக் கொன்றார்கள்” என்கிறார்.


புடவை வியாபாரத்துக்காக அக்கரைப்பற்றுக்குச் சென்றிருந்த தனது தம்பி, ஊர் திரும்பியபோதுதான் அவர் கடத்தப்பட்டதாக ஹினாயா கூறுகின்றார்.


அந்தச் சம்பவம் நடந்து இரண்டு மாதங்களின் பின்னர், தனது இன்னொரு சகோதரரும் மட்டக்களப்பு - நாவக்குடா பகுதியில் கடத்திக் கொலை செய்யப்பட்டதாகவும் பௌசுல் ஹினாயா தெரிவித்தார்.

படக்குறிப்பு,

இரண்டு மாதங்களுக்குள் சகோதரர்கள் இருவரை இழந்த பௌசுல் ஹினாயா.


”மற்றைய தம்பியின் பெயர் ரஊப். அவர் வீட்டில் நாலாவது பிள்ளை. அப்போது அவருக்கு 19 வயது. தொழிலுக்காக மட்டக்களப்பு சென்றிருந்தபோது கடத்திக் கொலை செய்யப்பட்டார்” என பௌசுல் ஹினாயா குறிப்பிட்டார்.


குருக்கள் மடம் படுகொலை நடந்த காலப்பகுதியில், அநேகமான தமிழர் பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருந்தது. ராணுவத்தினர் தலைகாட்டும் போது மறைந்துகொள்ளும் புலிகள் இயக்கத்தவர்கள், ராணுவம் சென்ற பின்னர் ஊர்களுக்குள் மீண்டும் நடமாடத் தொடங்குவர்.


சிலவேளைகளில், புலிகள் அமைப்பினரைக் கட்டுப்படுத்துவதற்காக படையினர் களமிறங்கும்போது, இரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பரம் மோதல்கள் இடம்பெறுவதுமுண்டு.


இந்தக் காலப்பகுதியில் தமிழர் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்லுறவு காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


முஸ்லிம்கள் என்பதற்காகவே தனது சகோதரர்கள் இருவரும் கடத்திக் கொலை செய்யப்பட்டனர் என்கிறார் பௌசுல் ஹினாயா. குருக்கள் மடத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் தோண்டப்பட்டு இஸ்லாமிய முறைப்படை நல்லடக்கம் செய்யப்படுவது - தமக்கு திருப்தியை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறுகின்றார்.

படக்குறிப்பு,

பௌசுல் அமீர் (குருக்கள் மடத்தில் படுகொலை செய்யப்பட்டவர்)


புலிகள் கடத்தியதை கண்டவர் தகவல் கூறினார்


சம்மாந்துறையில் தையற்கடை நடத்தி வந்த ஹபீபுர் றஹ்மான் எனும் தமது குடும்பத்தின் மூத்த சகோதரர், குருக்கள் மடத்தில் புலிகளால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறுகின்றார் நஸீலா. இவர் அரச தொழில் புரிகின்றார்.


”எங்கள் தந்தை குடும்பத்தை பராமரிக்கத் தவறியபோது, எங்களுக்காக எமது மூத்த சகோதரர்தான் உழைத்தார். அவரின் இழப்பை எதனாலும் ஈடுசெய்ய முடியாது” என்று கூறியபோது நஸீலா கண்ணீர் விட்டார்.


தனது சகோதரர் பயணித்த லாரியை புலிகள் கடத்திச் சென்றதை, அந்த வழியினால் பயணித்த ஒருவர் கண்டு வந்து - தங்களிடம் கூறியதாகவும் நஸீலா இதன்போது குறிப்பிட்டார்.


அனைவரும் கடத்தப்படவில்லை


குருக்கள் மடத்தின் வழியாகப் பயணித்த அனைத்து முஸ்லிம்களும் அன்றைய தினம் கடத்தப்படவில்லை என, பிபிசி தமிழுடன் பேசியவர்கள் கூறுகின்றனர்.


"அவர்கள் (புலிகள்) அன்று எல்லோரையும் கடத்தவில்லை. சிலரை செல்லுமாறு அனுமதித்திருந்தனர், சிலரைக் கடத்தினார்கள். முஸ்லிம்களை புலிகள் கடத்துவதாக அன்றைய தினம் செய்தி கசியத் தொடங்கியபோது, அதனை சிலர் நம்பவில்லை. 'நாங்கள் அந்த வழியால்தான் வந்தோம், எங்களுக்கு அப்படியொன்றும் நடக்கவில்லை' என்று - பிரச்சினைகள் எவையுமின்றி அந்த வழியால் வந்தவர்கள் கூறினார்கள்.

படக்குறிப்பு,

முஸ்லிம்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக ரஊப் அடையாளம காட்டிய இடம்

இதன் காரணமாக முஸ்லிம்கள் தொடர்ச்சியாக அன்றைய தினம் முழுவதும் அந்த வழியாகப் பயணித்தனர் என்கிறார் - காத்தான்குடி பள்ளிவாயில்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் ரஊப்.

முஸ்லிம்களுக்கு சந்தேகம் ஏற்படாமலிருக்க புலிகள் அவ்வாறு நடந்திருக்கலாம் எனவும் அவர் கூறுகின்றார்.

1980களில் இருந்தே முஸ்லிம்கள் காணாமலாக்கப்படுதல், கடத்தப்படுதல், முஸ்லிம்களிடம் கப்பம் கோருதல் போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளதாகவும், இவற்றினை விடுதலைப் புலிகளும், தமிழ் ஆயுதக் குழுக்களுமே செய்து வந்ததாகவும் ரஊப் குறிப்பிடுகின்றார்.

குருக்கள் மடத்தில் ஒரு இடத்தை இந்த செய்தியாளரிடம் காட்டிய ரஊப், படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் அங்குதான் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

கடற்கரையை அண்டிய அந்த இடத்துக்கு அருகில், தற்போது ராணுவ முகாமொன்று அமைந்துள்ளது.
















Post a Comment

0 Comments